அரசாங்க திணைக்களங்களில் சரியான தொடர்பாடல் இல்லாமையே குருநாகலில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னனின் அரசமண்டபம் இடிக்கப்பட்டமைக்கு காரணம் என ஜெனசெத பெரமுனவின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான ஜீனரத்ன தேரர் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.,
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.....
கூட்டமைப்பானது மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. இம்முறை தேர்தலில் கூட கூட்டமைப்பு சார்பில் முதியவர்களே களம் இறங்கியுள்ளனர். அவர்களால் இனிமேல் எதனையும் செய்யமுடியாது எனவே இளைமையான சேவையாற்றக்கூடிய இளைஞர்களை இம்முறை வெற்றிபெறச்செய்யவேண்டும்.
வன்னிமாவட்டத்தை பல்வேறு விடயங்களில் அபிவிருத்திசெய்யவேண்டும். முன்னாள் அமைச்சராகவிருந்த றிசாட் பதியூதீன் ஒரு இனத்திற்கு மாத்திரமே உதவிகளை வழங்கினார். அதனை ஏற்கமுடியாது.
வன்னி மாவட்டத்திற்கு மருத்துவ பீடம் ஒன்று அமைக்கவேண்டிய தேவை இருப்பதுடன் அதனை அமைப்பதற்கான முயற்சிகளை நிச்சயம் எடுப்பேன். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் நலன்கருதி அங்கு தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றை அமைக்கவேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் கவனமெடுக்கவேண்டும்.
அத்துடன் அரசாங்க திணைக்களங்களில் சரியான தொடர்பாடல் இல்லாமையே குருநாகலில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னனின் அரசமண்டபம் இடிக்கப்பட்டமைக்கு காரணம். அது தொடர்பாக அரசு கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறான விடயங்களில் அரச நிறுவனங்கள் தொடர்பாடலை பேணி இணக்கப்பாட்டுடன் செயற்படவேண்டும்.
அத்துடன் அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்படவுள்ள மிலேனியம் சவால் உடன்படிக்கை தொடர்பில் ஒவ்வொருவரும் சிறுபிள்ளைத்னமான கதைகளை கூறிக்கொண்டிருக்கின்றார்கள். எனவே அந்த விடயம் தொடர்பா முழுமையாக ஆராயந்துவிட்டு அது தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கவேண்டும் என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா